என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

நீ என்ன செய்வாய் பாவம்!

நீயும் நானும்
அமர்ந்திருந்து பேசும்
அந்த படிக்கட்டு
இன்று ஏனோ வெறுமையாக!

உன் முகம் பார்த்தபடியே
நானிருக்கும் பொழுதுகள்
நீயில்லாத இன்று கசப்பாக!

பலர் சுற்றியிருந்த போதும்
நான் மட்டும்
இந்த குரூர உலகில்
தனித்து விடப்பட்டதாய்
உணர முடிந்தது என்னால்..
இந்த மாற்றங்கள் எல்லாம்
ஏற்பட்டதெனக்கு உன்னால்!

உன் அருகேயிருந்து
பேசும் அழகிய தருணங்கள்..
இன்று ஆயிரம் முறை
தோன்றி மறைந்தது
தெரியுமா உனக்கு?

காலை, பகல், மாலை
எல்லாம் உன்னோடு
 செல்ல காத்திருப்பேனே
அந்த சுகம்
இன்று சுமையாகிப் போனதில்
ஆச்சரியம் இல்லை

உனக்கு இப்படியெல்லாம்
இருந்திருக்காது..
ஏனெனில்
இந்த அவஸ்தையை
ஆரம்பித்து வைத்த
பாவி நான் தானே.
நீ என்ன செய்வாய்
பாவம்!

என்னவென்று தெரியவில்லை

என்னவென்று தெரியவில்லை
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது

தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது

நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது

எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது

வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது

மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது

இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!

கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது

யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது

உனக்கொன்று தெரியுமா?

என் இதய மாளிகையில்
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!

உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..

இல்லை
நான் தான்
உன்னுள்  தொலைந்துவிட்டேன்!

கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!

இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே

வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது

சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது

அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்

வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்

எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!

சாயம்போன இதயம்

மறந்து போனேன் எல்லாமே..
என் இயல்பை
என் இருப்பை..

உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!

எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..

உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..

என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!

என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?

உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!

நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!

அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது

எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?

அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்

பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!

சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..

கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..

வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்

ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!

சந்தர்ப்பங்கள்

எத்தனை இன்பம்
உன்னுடன் நான் பேசிவிட்டால்..

மனசெல்லாம் பூ பூக்கிறது..
தென்றல் தாலாட்டுகிறது..
பாரமாக இருந்த இதயம்
பஞ்சாக பறக்கிறது!

நிறைய பேச வேண்டும்
உன் கண்கள் பார்த்து
உன் விரலைப் பிடித்து
உனதருகே இருந்து
தனிமையில் நிறைய பேச வேண்டும்

நான் இழந்தவை பற்றி
என் எதிர்காலம் பற்றி
என் ஆசைகள் பற்றி
என் கனவுகள் பற்றி
என் அன்பு பற்றி
என்னைப் பற்றியெல்லாம்
நிறைய பேச வேண்டும்

சந்தர்ப்பம் வருமா.. அவை
எப்போதும் போல
எனக்கு சதி செய்யுமா?

அல்லது
தருணம் பார்த்து யாராவது வந்து
என் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்களா?

உன்னுடன் பேசுவதற்கான
சந்தர்ப்பங்கள் தானாய்
உருவாகாது..
நாம் தான்
உருவாக்க வேண்டும்...

நான் உருவாக்கிக் கொள்வேன்
நீ???

சமுத்திரக் காதல்

அழுகிக் கிடக்கும்
மனத் திரையில்
மறுபடி மறுபடியும்
அவன் நினைவுகளே
வந்து விழுகின்றது!

ஒரு சமுத்திரமாக
ஆகிவிட்டிருந்த
என் காதல்
சொட்டுச் சொட்டாக
வடிந்து ஓடுகிறது!

குருதி எங்கும்
தீப் பிடித்து
என் இயலாமையை
மேலும்
பறைசாற்றுகின்றது!

நான் செய்த தவறுகள்
எல்லாம் ஒன்றுகூடி
மொத்தமாய் என்னை
வதைத்துத் தின்கின்றது!

விதியிடமிருந்து
தப்பி வந்த பொழுதுகள்
கூர் நகம் கொண்டு - என்
குரல்வளை பிடிக்கின்றது!

உன்னைப் பற்றியே இரகசியம் பேசுகிறேன்!

நீ வரமாட்டாய் என்று
நான் உறுதி கூறினாலும்
என் மனது அடம்பிடித்து
என்னை வதைக்கிறது!

விடிந்தும் விடியாத
இந்த காலைப்பொழுதில்
கீச்சிட்டுக் கொண்டிருக்கும்
ஊர்க் குருவியிடம்
உன்னைப் பற்றியே
இரகசியம் பேசுகிறேன்!

இதயத்தில் சுழன்றடிக்கும்
சூறாவளிக்கு
நீ தந்த கவிதைகளைத்தான்
கவசமாக காட்டிக் கொண்டிருக்கிறேன்!

என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் போல் பூத்திருக்கும்
வாசமில்லாத மலர்களுக்கும்
இப்போதெல்லாம்
வணக்கம் கூறி புன்னகைக்கிறேன்!

மார்கழிக் குளிரால்
வெடவெடக்கும் என் மேனிக்கும்
உன்னால் சிறகடித்து
படபடக்கும் என் இதயத்துக்கும்
உன் நினைவுகளை அள்ளியெடுத்து
போர்த்திக் கொண்டிருக்கிறேன்!






நீயேதான்

ஒரு
பூர்வீகத்தின் காலடியில்
புதைந்து கிடந்த
என் இதயத்தைக்
கண்டுபிடித்து
தூசு தட்டி எடுத்தது யார்?
நீதான்!

அமில விஷங்களால்
அழுகியிருந்த
என் மனதை
அள்ளியெடுத்து
பாதுகாத்து பத்திரப்படுத்தியது யார்?
நீதான்!

திக்குகள் தெரியாமல்
விக்கி நான் தவித்தபோது
தடுக்கி நான் விழுந்து விடாமல்
தட்டிக் கொடுத்தது யார்?
நீதான்!

இயலாமையின் உச்சத்தில்
இடிந்து போயிருக்கையில்
இது பிழை என்று என்னிடம்
இனிமையாக எடுத்துரைத்தது யார்?
நீதான்!

மனிதநேயம் செத்துவிட்டதாய்
மனதளவில் மரித்திருந்தபோது
மயிலிறகாய் மனதுக்கு
ஒத்தடம் தந்தது யார்?
நீயேதான்!

ஆனால்
இன்று..
என்னைப் பிரிந்து
கொல்லாமல் கொன்று
மீண்டும் மரணிக்கச் செய்தது யார்?
அதுவும் நீயேதான்!



உலகுக்கே கத்திச் சொல்ல வேண்டும்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
உன் மேல் நான் கொண்ட
பாசம் கூடிக்கொண்டே போகிறது

என்னவென்றே தெரியவில்லை
உன்னை அப்படியே
வைத்தகண் வாங்காமல்
பார்த்தவாறே இருக்க வேண்டும்
போலிருக்கிறது

உனது பேச்சும்
நடத்தையும்
சிரிப்பும்
என் இதயத்துக்குள்
பசுமரத்தாணி போல
பதிந்தாகிவிட்டது

சிறு குழந்தைபோல
நீ சொல்லும்
கதைகளை
முழுநாளும் கேட்டுக்கொண்டே
இருக்க வேண்டும்

எப்போதாவது வந்துபோகும்
உன் கோபத்துக்கும்
உனக்கும்
நான் கட்டுப்படுவது
எனக்கு ரொம்பப் பிடிக்கிறது

எனது அன்பை
நான் வெளிப்படுத்துவது
உனக்கு
எரிச்சலாகவோ
அலட்டலாகவோ
இம்சையாகவோ
தொல்லையாகவோ இருக்கலாம்..

ஆனால்
அதற்காகவெல்லாம்
நான் பேசாமல் இருக்கப் போவதில்லை

உன்னுடன் நிறைய பேச வேண்டும்
உன் அன்பைப் பெற வேண்டும்

எனக்காக நீ  இருக்கிறாய்
என்பதை உலகுக்கே கத்திச் சொல்ல வேண்டும்!!!

நானறியேன்..

எனக்கானவனே!
எனக்குள் உதிக்கும்
உன் மீதான அன்பை
உன்னால்
தாங்க முடியவில்லை என்கிறாய்..

நிறைய பாசம் வைத்தால்
பிரச்சினைகள் வரும் என்கிறாய்..

அதை எந்த அர்த்தத்தில் நீ
சொல்கிறாய் என்பதை
நானறியேன்..

நானும், நீயும்
பிரச்சினை படாதவிடத்து
மரணத்தைத் தவிர நம்மை
பிரிக்க சக்தயுடையோர் யார்?

நான்...
என் நேசம்...
என் இதயம்...
இவையெல்லாம்
வேண்டும் என்கிறாயா?
வேண்டாம் என்கிறாயா?
எனக்குப் புரியவில்லை

என் காதலை
நான் ஒருபோதும்
வலுக்கட்டாயமாக
காட்டப் போவதில்லை

ஒவ்வொரு தாக்கத்துக்கும்
எதிரானதும் சமமானதுமான
மறுதாக்கம் இருந்தால்தான்
அந்த நேசிப்பின் ஆயுள் கூடும்...

உயிரே
என்னுள் உற்பத்தியாகும்
இந்த அன்பை
நீ வெறுக்கின்றாயா?

குளிரெடுக்கும் என் இதயம்
உன் இதயத்தைத் தானே எதிர்பார்க்கிறது?

அது நிம்மதியாக
உறங்குவதற்;கு உன்
மார்ச்சூட்டைத்தானே நிதம் கேட்கிறது?

நீ இல்லாதுபோனால்
நான் இல்லை..
ஆனால் நானில்லை
என்றால்
உனக்கு பிரச்சினைகளே இல்லையல்லவா?

தயவு செய்து என்னிடம்
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே..

உனக்கு என்னைப் பிடிக்கவில்லை
என்றால்
கூர் வாள் எடுத்து
என் இதயத்தை குத்திக் கிழித்துவிடு..

அப்படியே மன்டியிட்டு விழுந்து
உன் காலடியிலேயே
செத்துப் போகிறேன்!!!

Tuesday, December 3, 2013

சுருதி இல்லாத பாடல்

சுருதி இல்லாத பாட்டைப் போல்தான்
நான் பட்ட பாட்டையும்
சொல்ல வேண்டியிருக்கிறது!

காதலித்தால்
கவிதை வருகிறதோ இல்லையோ
கட்டாயம்
கண்ணீர் வருகிறது!

பிரிவின் துயரத்தை
இனியும் தாங்க முடியாது
என்னால்!

எத்தனை நாளைக்குத்தான்
என் இதயத்தை
நானும் ஏமாற்றித் தேற்றுவது?

நீ...
உன் குடும்பம்..
உன் சூழல்.. யாவும்
என் நினைப்பை விட்டும்
உன்னை தூரமாக்கியிருக்கிறது!

நான்..
என் தனிமை...
என் அன்பு.. எல்லாம்
உன் நினைப்பால்
மனதை ஈரமாக்கியிருக்கிறது!

உன் உள்ளத்தின் ஓரத்தில்
நான் வீற்றிருப்பதை அறிவேன்..
கண்ணால் காணாமல்
கருத்தொருமித்து வாழலாம் என்றாயே..

உன்
தத்துவங்களின்
ஞாயத்தை புரியுமளவுக்கு
எனக்கு
வயதுமில்லை
அறிவுமில்லை!

உறவில்லா மலரே

உயிருக்குள் பூத்த
உறவில்லா மலரே
உன்னிடம் எதைப்பார்த்து
உருக்குலைந்து போயிருக்கிறேன்?

நீயில்லா நிமிடங்களின் வலியை
நிஜமாகவே உணரச் செய்தவனே
உனக்குத் தெரியுமா?
இப்போதெல்லாம் - என்
சிந்தையில் நிறைந்த
சிறைக்கைதி நீதான் என்று?

உன் ஞாபகங்கள் சுமந்தபடி
எப்படியோ கழிகின்றன
எனதான நிமிடங்கள்!

வருவாயா இல்லையா
வரவேண்டுமே... என்று
எனதுள்ளம் ஒவ்வொரு நொடியும்
கிட்டத்தட்ட ஆயிரம் தடவை
துடிக்கிறது தெரியுமா?

சாப்பிடும் போதும்
தூங்கும் போதும்
இருக்கும்போதும் நடக்கும்போதும்
வீட்டிலும், அலுவலகத்திலும்
நீ தான் இருக்கிறாய்
என் இதயத்துக்குள்!

ஆனபோதும்
நீ என்னை, என் மனதை
களவாடியதை நான்
எப்படி எடுத்துரைப்பேன்?

எதுவுமே இல்லாமல்
ஏற்பட்ட நம் உறவு
எதுவுமே இல்லாமல்தானே
எட்டி நடக்கிறது?

அப்படியிருக்க
என் நினைவுகள் கொஞ்சமாவது
உனக்குள்ளும் இருக்கிறதா?

இடைவெளி நிரப்புவாயா

பரீட்சையின்போதும்
உன்
பாச முகம் கண்முன்னே

பதற்றத்தின் போதும்
உன் உருவம் நிழலாடுது
என் முன்னே!

தலைக்குனிந்தெழுதுது பேனா
தலைநிமிர்ந்து பார்ப்பது நானா
என்று எனக்குள் ஒரு அவஸ்தை!

என்ன செய்கிறாய்
என்று தெரியாமலேயே
என் எண்ணங்கள் சுற்றித் திரிகிறது

மேலெழும் நினைவலைகள்
மீண்டும் சுழியடித்து
என் உயிருக்குள் உன்னை
எட்டிப் பார்க்கிறது!

எனது இதயத்தில் எழுந்துள்ள
இடைவெளியை நீ
இடைவெளி நிரப்புவாயா - இல்லை
இரட்டிப்பாக்குவாயா..???

தவித்துத் தணியும் என் மனதை
என்ன தந்து தீர்க்கப்போகிறாய்.....
நீ வந்தபின் என்னிடம்
நன்றாக மாட்டி சாகப்போகிறாய்!

Friday, November 22, 2013

உனக்கு ஆயிரம் நன்றிகள்

அன்பை வெளிப்படுத்திய பின்
அந்த அவஸ்தைகள்
எப்படியிருக்கும் என்பதை
அநுபவபூர்வமாக உணரச் செய்தாய்...

திக்கு திசை தெரியாதிருந்த நான்
இன்று உன் திசை மட்டும்
பார்த்தபடி
பயித்தியக் காரியாய் இருக்கின்றேன்..

அடிவயிற்றிருந்து
எழும் ஒருவித
பயமும், தவிப்பும் நீ
வருவாயா இல்லையா
என்ற திண்டாட்டமும்
என்னை நிலைகுலையச் செய்கிறது!

ஒவ்வொரு காலையும்
உன்னுடன் என்ன பேசணும்
என்று எண்ணியே ஆவலுடன் வருகின்றேன்..

ஆனால் நீயோ
தினமும் ஏமாற்றி
என் நினைவுகளை
மழுங்கடிக்கிறாய் உயிரே...

உன்னுடன் சாப்பிடுவதற்காகவே
காலைகளில் பசியுடன் வருகின்றேன்
எனினும்
நீயில்லாத போதுகளில்
பசி எங்கே நினைவிருக்கின்றது?

பகல் பொழுதுகளிலும்
பசிக்கவில்லை.. பிறருக்காக
தவிர்க்க இயலவில்லை
ஆதலால் சாப்பிடுகிறேனடி
உணவுடன் சேர்த்து
உன் நினைவுகளையும்!

ஏன் எனக்குள்
இந்த மாற்றங்கள்..
உன்னைப் பற்றிய
நினைவுப் போராட்டங்கள்?

நாளை வருவாய் என்ற
நம்பிக்கை தீர்ந்து
நாளையாவது வருவாயா
என்று புலம்பச் செய்தவளே..

உனக்கு ஆயிரம் நன்றிகள்
என்னை மீண்டும்
கவியெழுத வைத்ததற்கு!

காத்திருக்கச் செய்தாயடி தோழி..

காத்திருக்கச் செய்தாயடி தோழி..
உன் வருகைக்காக
உன் சிரிப்பிற்காக
உன் குரலுக்காக
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு மெஸேஜ்
பண்ணிய பிறகு
பதில் வரும் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு கோல் பண்ணிய பிறகு
நீ பேசுவாய் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி

நான் என்ன செய்யட்டும்
நீயே சொல்

நீ சூடும்
பூக்களாக மாறி விடட்டுமா?
உன் கையில் வளையலாக
ஆகி விடட்டுமா?

நீ சுவாசிக்கும் மூச்சாக
மாறி விடட்டுமா?
இல்லை நீ குடிக்க
ப்ளேன்டீயாக
ஆகி விடட்டுமா?

என்ன செய்யட்டும்
நீயே சொல்!

என்ன இது
எனக்குள் இனம் தெரியாத
ஒருவித இன்பம்..

அந்த
இன்பத்தினுள்ளே
தாங்க இயலாத ஒரு துன்பம்?

முடியவில்லை பெண்ணே
வந்துவிடு

உனக்காக என் இதயம்
துடிப்பதை மறந்து விடாதே..
பிறகு அது
துடிப்பதை நிறுத்திவிட்டால்
வருந்திவிடாதே!

நீ இன்று வரமாட்டாய்

நீ இன்று வரமாட்டாய் என்று
நானெப்படி அறிவேன்?
நீ இல்லாவிட்டால்
நான் தீயாய் எரிவேன்!

உண்மையில்
நீ வர மாட்டாயா?
சேலை அணிந்த
ஒரு தேவதையாக
என் முன்னே தோன்ற மாட்டாயா?

எதிர்பாராத தருணமொன்றில்
குட்மோர்னிங்
என்று அழகாக சொல்லிக்கொண்டு
என்னிடம் வந்துவிட மாட்டாயா?

இல்லை!
நீ வரமாட்டாய்..

எனக்குத் தெரியும்!
காத்திருக்க வைப்பதிலும்,
பொய் சொல்லிச் சிணுங்குவதிலும்தான்
பாசத்தின் ஆழம் கூடும் என்று!

உன் குரல் கேட்ட பின்பு
குமுறிக் கொண்டிருந்த என் இதயம்
குளிர்ச்சியானது..
'எனக்காக செலவழிக்க
வேண்டாம் பாசம் மட்டும் போதும்'
என்பவளே
பாசத்தை தின்றும்
நேசத்தைக் குடித்தும்
உயிர் வாழலாம் என்கிறாயா?

அப்படியானால் வா
இந்த பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
ஒரு புள்ளியாய் மாறி
மணல் சோறு தின்னலாம்
மழையைக் குடிக்கலாம்
ஆகாயத்தை வாரியெடுத்து
அணிந்து கொள்ளலாம்
கடல் நீரா(ரி)ல்
கவிதை எழுதலாம்...

முழு உலகையும்;
கற்பனையில்
உலா வரலாம்...
என் மனசைத் திறந்து பார்
உனக்காக ஓராயிரம்
விண்மீன்களை சேமித்திருக்கிறேன்..

திறக்க முடியவில்லை என்றால்
உடைத்துப் பார்
நீ கோபத்தில் வீசிய சொற்களை எல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் மீதுள்ள பாசம்;
நிரம்பி வழியும்
என் இதயத்துக்கு - என்ன அணைக்கட்டு
போடப் போகிறாய்?

தயவுசெய்து
திங்கட் கிழமையாவது வாடி..
அது வரை என் மனசு கிடக்கும் 'வாடி'..!

மனமெனும் அருவி

அவ்வப்போது தோன்றும்
உணர்வுகளால்
சில வேளைகளில்
புத்தி பேதலிக்கிறது!

ஆனாலும்
தெரிந்து கொண்டு
மனது அவனை மட்டும்
காதலிக்கிறது!

வருவானா இல்லையா
என்று தெரியாமலேயே
மனது அவனுக்காய்
தவிக்கிறது!

வரமாட்டான் என்ற
உறுதியிருந்தாலும்
அவனை இதயம்
எதிர்பார்க்கிறது!

அன்பில்
அரவணைப்பில்
ஆறுதலில் எல்லாம்
அவனின் விம்பம்
வந்தாடுகிறது!

தூரே இருக்கும்
அவனிடம்
மனம் எனும் அருவி
பாய்ந்தோடுகிறது!

பாறாங் கல்லாய்
இருக்கும்
என் சிறு இதயம்
அவனின் நினைப்பில்
லேசாகிறது!

எனக்குள் உள்ள
அணுக்கள் எல்லாம்
அவனின் மூச்சை
சுவாசிக்கிறது!!!

வேதனைத் தீ

பல நாட்கள் ஆயிற்று
உனை நானும் மறந்தின்று
ஆனாலும் சில சமயம்
உன் நினைவே மருந்தொன்று!

இதயத்தால் நேசித்தேன்
இயல்பாயுனை சுவாசித்தேன்
மறந்தாயே நீ என்னை
எரித்தாயே என் நெஞ்சை

சொல் கத்தி பட்டெந்தன்
இதயத் துகள் சிதறியதே
சொல் பெண்ணே ஏன் சொன்னாய்
என் உள்ளம் பதறியதே

எதிர்காலம் இனித்திடுமா
நீயின்றி கழிந்திடுமா
எனக்குள்ளே தீ மூட்டும்
நினைவுகளும் அழிந்திடுமா?

அடி பெண்ணே நீ என்னை
மறந்தெங்கு சென்றாயோ
மறக்காமல ;நான் இருக்க
மாயங்கள் செய்தாயோ?

உன் வதனம் எனக்குள்ளே
வேதனைத் தீ மூட்டிடுதே
நாமிருந்த மரநிழலோ
என் மனதை வாட்டிடுதே

என் பேனை மை என்றும்
உனை பற்றியே எழுதும்
நீ நலமாய் வாழ்வதற்கு
வரம ;கேட்பேன் நான் தொழுதும்!!!

வஞ்சகம்

வாஞ்சையுடன் பழகுவதற்கு
சிலராலும் முடிவதில்லை
வஞ்சகமாய் நடிப்பதற்கு
பலராலும் முடிகிறது!

உள்ளத்தால் நெருங்குவதற்கு
சிலரால்தான் முடிகிறது
உள்ளத்தை உடைப்பதற்கு
பலராலும் இயலுகிறது!

எந்தப் புற்றில்
எந்தப் பாம்பு உள்ளதென்று
யாரறிவார்?

அதுபோலத்தான்
யார் மனதில்
என்ன உள்ளதென்பதும்!

தலைகுனிந்து பொறுத்ததெல்லாம்
தலை நிமிர்ந்து
நிற்பதற்குத்தான்!

எமக்காக ஒரு ஜீவன்
எப்போதும் இருக்க வேண்டும்
அந்த எதிர்பார்ப்பில்தானே
வாழ்க்கை அடங்கியிருக்கிறது?

நட்பு என்ற வார்த்தை
நயவஞ்சகத்தை ஏற்றிருப்பதால்
சகோதர உறவுகள்தான்
சாகும் வரை தொடருமென்பேன்!

என் வாழ்க்கை

தரணியிலே தனியாக
நான் வாழச் செய்யாமல் - நல்
பெற்றோரை தந்திட்ட
இறைவனுக்கு பல நன்றி!

கருவுற்ற நிமிடம் முதல்
கண்ணுங் கருத்துமாயிருந்து
காலப்போக்கில் அழுகையினூடு
தாயென்னை ஈன்றெடுத்தாள்!

அழுகை எல்லாம் ஆனந்தமாய்
ஆனபொழுது வந்தபோது
கண்குளிர என் தந்தை
வாரி என்னை முத்தமிட்டார்!

நிலவு காட்டி சோறு ஊட்டி
நித்தமும் பாசம் காட்டி
பாராட்டி சீராட்டி
பார்த்தாரே என் உம்மா!

தோளில் தூக்கி மார்பில் ஏற்றி
தொட்டில் வாங்கி தூங்க வைத்து
நான் விழித்தால் தான ;விழித்து
காத்தாரே என் வாப்பா!

பாடசாலை போகையிலே
ஆள்காட்டி விரல் பிடித்து
உம்மாவுடன் சென்றதெல்லாம்
அடி மனசில் அப்படியே!

ஓதலுக்கு செல்வதற்கு
பயத்தோடு வாப்பாவின்
பின்னாலே மறைந்து நின்று
சென்றதெல்லாம ;நினைவிருக்கு!

தங்கையும் தம்பியும்
தனியாக ஒழிந்து கொண்டு
தேட வைத்த பொழுதெல்லாம்
பசுமையாய் பதிஞ்சிருக்கு!

எல்லாமே நினைவிருக்க
என் நெஞ்சில் நெறஞ்சிருக்கு
என் குடும்ப அன்பினில்தான்
என் வாழ்க்க அடங்கிருக்கு!!!

தூக்கம்

என்னால் தாங்க முடியவில்லை
பாடாய் படுத்துகிறது நோயே
பாடுபட வைத்திற்று தாயை!

நான் குணமாக
வேண்டும் என்றா
இத்தனை நேர்ச்சைகள்
இதர நோன்புகள்
ஏனும்மா..
என்னால் தாங்க இயலவில்லை!

கண் வருத்தம் வந்தாலும்
கலங்காதிருக்கும் என் வாப்பா
என் வருத்தம் என்றதுமே
எப்படி ஒடிந்து போனார்?

தங்கச்சி...
நீ ஏனம்மா அழுகிறாய்
எனக்கு ஏதும் ஆகாது!
உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்
ஆறுதல் கூற வேண்டிய நீயே
இப்படி அழலாமா?
வேண்டாம் கண்களை
துடைத்துக்கொள்!

தம்பி..
நீ ஏனடா
அப்படிப் பார்க்கிறாய்?
எல்லோரையும் பார்க்க வேண்டிய நீ
என்னைப் பார்த்தே
மனமுடைந்துவிடாதே!

உங்கள் பாசம்
இருக்கும் வரை
என் உயிரும்
பத்திரமாயிருக்கும்
உங்கள் உள்ளங் கைகளுக்குள்!

கலங்காதீர்கள்
அப்பால் செல்லுங்கள்
எனக்கு
தூ..க்..க..ம்  வருகிறது!!!

மருந்துண்டா?

பல வருடம் கழிந்தாலும்
பலி சொல்லில் குறைவில்லை
அகதியில்லை நாம் என்று
சொல்லும் நாள் வரவில்லை

ஓடோடி வந்ததெல்லாம்
ஓருயிரைக் காப்பதற்கே
நாடோடி என்றெம்மை
நினைத்திங்கே பார்ப்பதற்கா?

வயலோடு ஏர் உழுது
வாய்க்காலில் நீர் பிடித்து
அமுதுண்டு வாழ்ந்தவர்தாம்
அழுதபடி கிடக்கின்றோம்

குழந்தைகள் குடும்பம் என
குதூகலமாய் வாழ்ந்துவிட்டோம்
குற்றுயிராய் கிடக்கின்றோம்
குறைப்ட்டு வாழ்கின்றோம்

ஒரு தாயின் பிள்ளைகளாய்
ஒரு வீட்டில் வாழ்ந்த நாங்கள்
ஒரு குடிசை தானுமின்றி
முகாம்களிலே வாடுகின்றோம்..

உடற் பிணியைத் தீர்ப்பதற்கோ
உத்திகளும் பல உண்டே
மனச் சுமையை தீர்ப்பதற்கு
மாமருந்து ஏதுமுண்டோ???

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Saturday, October 19, 2013

அக்கா!

நீ என் உறவுக்காரியில்லை
தோழியில்லை
முன்பின் பழக்கமுமில்லை
நாம் ஒரே இனமுமில்லை..

ஆனால்
அதைவிடவும்
என் உள்ளத்தை தொட்ட
அன்பு அக்கா ஆகினாய்!

பார்த்த முதல் தடவை
அன்புடன் உறவாடினாய்..
பாசத்தை வலை வீசி
அன்பு உறவாகினாய்..

நொடிப்பொழுது போதுமுனக்கு
நற் குணங்களைக் காட்டிட
பொறாமைகளற்ற உன் வதனம்
பிரகாசமாய் மிளிர்ந்திட..

அலுவலகம் பிடிப்பதென்றால்
உன்னால்தான் சகோதரியே
அதனாலே உனை மதிப்பேன்
ஆதரவாய் இருப்பாயே!

நீ
காலைப் பனியை ஏந்தும்
வெறும் புல் வெளியில்லை..
சம மனதோடு
எதையும் நோக்கும்
சமவெளி!

இதுவரை இருந்ததெல்லாம்
இதயத்தில் பாரம்..
இப்போது இன்பமொன்று
இதயத்தின் ஓரம்!

அம்சமாக நீ பெற்ற
அழகிய உன் குடும்பம்
பூங்காவனமாய் பூத்துக்குலுங்க
இவளது பிரார்த்தனைகள்!

உயிருக்குள் ஈரலிப்பாய்

எப்போதும் தோன்றுகின்ற
உனை பற்றிய எண்ணங்கள்
தப்பேதும் செய்யாத
எனை மட்டும் கொல்வது ஏன்?

பிரியங்கள் இல்லாமல்
பிரிந்து நீ போன பின்னும்
யதார்த்தத்தை உணராமல்
உன்னையே எண்ணுவதேன்?

உன்னோடு நானிருந்து
உயிர் வாழ்ந்த காலங்கள்
உருமாறிப் போகாமல்
உயிருக்குள் ஈரலிப்பாய்...

வேறு வேறாய் வாழ்ந்தபோதும்
கற்பனையில் ஒன்றாக
சேர்ந்திருந்த நினைவலைகள்
உதிரத்தை உறிஞ்சுவதாய்...

உன் கண்ணில் எனைப் பார்த்து
நெஞ்சோடு உனை சேர்த்து
கழித்திட்ட காலங்கள்
கண்முன்னே நிழல்போல...

மடிமீது சாய்ந்திருந்து
கொடி பூவாய் உனை சுமந்து
சுகம் கண்ட பொழுதெல்லாம்
மனவெளியில் முள்ளாக...

ஞாபகக் கனவுகளில்
கூடி நின்ற நம் பொழுது
சுட்டெரித்து நிதம் என்னை
சுடுகாடாய் பயமுறுத்த...

முற்றாக எனைப் பற்றி
முழுதாக மறந்தவளே
உனக்கென்று வாழ்ந்த என்னை
கொஞ்சமேனும் நினைவிருக்கா???

Thursday, February 28, 2013

மூதூர் முத்தே!


குடும்பத்தின் சுமை போக்க
குதூகலத்தை தினம் சேர்க்க
சவூதிக்குப் போனாயே இளஞ்சிட்டே
சடலமாய் ஆனாயே சிறு மொட்டே!

பதினெட்டும் நிரம்பாத
பருவ வயதில் நீ
பாலைவனத்தில் கால் பதித்தாய்..
வருடங்கள் சில கழிந்து
வாழ்க்கை தனை இழந்து
கைதியாய் சிறையில் தீ மிதித்தாய்!

பச்சிளம் குழந்தைக்கு
பாலைப் புகட்டப் போய்
பாவியாக நீ கணிக்கப்பட்டாய்..
`கொல்லவில்லை நம்புங்கள்'
எனக் கதறிச் சொன்ன போதும்
கொலை செய்ததாகவே பழிக்கப்பட்டாய்!

வெளிநாடு என சென்று
வெளிவாரியாகப் படித்து
பட்டங்கள் பெற்றவர்கள் பலர் இருக்க..
ஓட்டைக் குடிசைக்கு
ஓடு போடப் போய் - நீ
கொலைகாரியான நிலையை ஏதுரைக்க?

குடும்ப நிலை சீர் செய்ய
குமரியாகப் போன நீ
குழந்தையைக் கொண்டிருப்பாயா?
இல்லை..
மனதால்தான் எண்ணியிருப்பாயா?

வருமானம் வேண்டாமே – உன்
வருகைக்காய் காத்திருந்தோம்..
பெற்றோரும் நாமும்தான்
நீ வரும்வரை பார்த்திருந்தோம்!

வல்லோனின் தீர்ப்பு
வலுவாக ஆன பின்பு
வையகத்தில் அதைத் தடுப்பார்
யாருண்டு? - ஆனால்..
பல பெண்கள் வெளிநாடு
பயணிப்பதைத் தடுத்த உனக்கு
சரித்திரத்தில் அழியாத பேருண்டு!

ரிஸானா..!
சுவர்க்கத்தில் உனக்குண்டு
மேலான அந்தஸ்து..
அனைவரும் மன்றாடுகிறோம்
உனக்காக துஆக் கேட்டு!!!

Monday, January 7, 2013


'விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கிய படைப்பாளிகள் இருக்கின்றார்கள்'


'கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபவர்கள் சிறுவர்களுக்கான தேடலை அதிகரிக்கும் விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. அதிக கரிசனை காட்டுவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகள் காணப்படுகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் இது தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகள் தரப்படுமேயானால் அதிகமான சிறுவர் இல்க்கிய படைப்பாளிகளை காணமுடியும்' என்கிறார்  தியத்தலாவ எச்.எப்.றிஸ்னா.

பத்திரிகையொன்றிற்கு அனுப்பிய கவிதை இவரது பெயருடன் பிரசுரமாகியதை தொடர்ந்து தனது எழுத்துப்பணியை ஆரம்பித்த இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கிய படைப்பாளி என தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

'இன்னும் உன் குரல்' கேட்கிறது என்ற எனது கவிதை தொகுதியையும் 'வைகறை' என்ற சிறுகதை தொகுதியையும் இரு சிறுவர் இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ள இவர் இன்னும் 3 சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை, 'மழையில் நனையும் மனசு' (கவிதைத் தொகுதி), 'திறந்த கதவுள் தெரிந்தவை' (விமர்சனத் தொகுதி) ஆகியவையும் வெளிவரவுள்ள நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திறமையை வெளிபடுத்த பல இலக்கிய போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர்  பணப்பரிசில்களையும் பாராட்டுதல்களையும் தனது திறமையின் வெளிப்பாடாக பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தமிழ் மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை,


கேள்வி: உங்களது எழுத்து துறையின் ஆரம்ப காலம் குறித்து கூறமுடியுமா? 


பதில்:- 'காத்திருப்பு' என்ற கவிதை 2004ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததை தொடர்ந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தேன். அதன்பிறகு பல பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். அவை வெகுகாலம் செல்லுமுன்னே பிரசுரமாகியதில் வந்த உற்சாகம் மேலும் என்னை எழுதத் தூண்டியது உண்மையே.

எனினும் ஆரம்பத்தில் கவிதைத் துறையில் மட்டும் கால் வைத்த நான் தற்போது சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றேன். இதற்கு சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதுதான் காரணம்.

அவர் எனக்கு அளித்த ஊக்கங்கள், நல்ல ஆலோசனைகளே என்னை இலக்கிய செயற்பாடுகளில் அதிக கரிசனையுடனும் முனைப்புடனும் செயற்படுவதற்கு உந்துதலளித்தது.  அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் விசேட நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அதே சந்தர்ப்பத்தில் என்னையும், எனது எழுத்தையும் தட்டிக்கொடுத்து உற்சாகமளித்த எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

கேள்வி:- கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் இவற்றை தவிர்ந்து வேறு எந்த துறைகளில் அதிக ஆர்வம் காணப்படுகின்றது?

பதில்:- மேற்குறிப்பிட்ட துறைகளில் எனக்கு அதிக ஆர்வம் காணப்பட்டபோதிலும் எதிர்காலத்தில் நாவல் துறையில் காலடி எடுத்து வைக்க எண்ணியிருக்கிறேன். அதனூடாகவும் எனது இலக்கியப் பணியை மென்மேலும் கொண்டுசெல்ல உத்தேசமிருக்கிறது. ஏனெனில் கவிதை, சிறுகதை என்பவற்றில் மட்டுப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி எழுதும் பல விடயங்களை நாவலில் விரிவாக ஆராய்ந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது. எனவே அதுகுறித்த முயற்சிகளில் எதிர்காலத்தில் ஈடுபடும் எண்ணம் எனக்கிருக்கிறது.

கேள்வி:- சிறுவர் இலக்கியம்  மீதான ஆர்வம் எழுந்தமை பற்றி கூறமுடியுமா?

பதில்:- உண்மையில் சொல்வதென்றால் ஆரம்பத்தில் சிறுவர் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபோதிலும் அதை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கான வழிவகைகளை நான் அறிந்திருக்கவில்லை. எவ்வாறான விடயங்கள் சிறுவர் இலக்கியத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும், எவை தவிர்க்கப்பட வேண்டும் போன்ற அடிப்படையான விடயங்களில் தெளிவிருக்கவில்லை.

அப்படியிருக்கும்போது எமது இஷ்டத்துக்கு சிறுவர்களுக்கான படைப்புக்களை படைக்க முடியாதல்லவா? சிறுவர்களின் மனதில் பதியக்கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய விடயங்களைத்தான் நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுக்கும் அச்சந்தர்ப்பத்தை நான் சரியாக பயன்படுத்திக்கொள்ள உறுதுணையாயிருந்த சகோதரி சுரேகா தம்பிதுரை அவர்களுக்கும் (ரூம்டுரீட் நிறுவனம்) இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி:- சிறுவர் இலக்கியங்களை படைக்கும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றீர்கள்?


பதில்:- ஏனைய துறைகளில் படைப்புக்களைப் படைக்கும்போது சம வயது படைப்பாளிகள், அல்லது வயதில் மூத்தோர் அவற்றை வாசிக்கிறார்கள். அதில் பொதுவாக எதுவித சங்கடங்களும் ஏற்படுவதில்லை. எனினும் சிறுவர் இலக்கியத்தை பொறுத்தமட்டில் சிறுவர்களில் தரத்துக்கு நாம் இறங்கி, கிட்டத்தட்ட சிறுவர்களாக மாறியே அவற்றை எழுத வேண்டியிருக்கிறது. சின்னச்சின்ன விடயங்களிலும் நுணுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிறுவர்களுக்கு ஒரு விடயத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் என்றால் அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும். சிலந்திக்கு எத்தனைக் கால்கள், நண்டுக்கு எத்தனைக் கால்கள் போன்ற விடயங்களில் கூட அவதானமாக இருந்து சரியாக எழுத வேண்டும்.

கேள்வி:- இலங்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி கூறமுடியுமா?

பதில்:- இலங்கையில் சிறுவர் இலக்கியத்துறை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபவர்கள் சிறுவர்களுக்கான தேடலை அதிகரிக்கும் விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில் அதிக கரிசனை காட்டுவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகள் காணப்படுகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் இது சம்பந்தமான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு, அறிவுரைகள் தரப்படுமேயானால் இன்னும் பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் உருவாவதற்கு ஏதுவாக அமையும்.

கேள்வி:- போட்டி மிகுந்த சூழலில் உங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் எழுத்துத் துறையில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:- தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக என்று நான் எந்தவித முயற்சிகளையும் பிரத்தியேகமாக மேற்கொள்வதில்லை. எனினும் என்னுடைய எழுத்துப்பாணி எனது கவிதைகளை இலகுவாக இனங்காணச் செய்வதாக பலர் கூறியிருக்கிறார்கள். எதுகை, மோனை, சந்தம் என்பவற்றில் அதிக கரிசனை காட்டி எழுதி வருவதுண்டு. அதுபோல சிறுகதைகளில் என் கற்பனைக் கதைகளும், கண்ட, கேட்ட அனுபவங்களை வைத்து எழுதியவைகளும் இருக்கின்ற அதேவேளை புத்தகங்களுக்காக நான் எழுதும் இரசனைக் குறிப்புக்களில் எழுத்தாளர்களை வீழ்த்தக்கூடிய குறைப்பாடுகளை குறிப்பிடுவதில்லை. அக் குறைபாடுகளைத் தனிப்பட்ட முறையில்தான் அந்தந்த நூலாசிரியர்களுக்கு தெரிவிக்கின்றேன். 

நாங்கள் காலத்துக்கு எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் காலம் நமக்கு திருப்பித் தருகிறது. என்னாலான விடயங்களை நான் எழுதினேன். இன்று ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளர் சூழவில் நானும் இருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி:- இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துகொண்டு எழுத்து துறையில் நிற்பதில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?


பதில்:- நிச்சயமாக மார்க்கம் கல்விக்கு தடையில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துகொண்டு, இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறாமல் நாம் இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதில் எந்தப் பிரிச்னையும் வந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இலக்கியம் என்பது ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு பாலம். இவ்வாறானதொரு துறைக்கு இஸ்லாம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை.

கேள்வி:- புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதைப்
பற்றிய உங்களது கருத்து?


பதில்:- எழுதிய படைப்புக்கள் அழிந்து போகாமல் இருப்பதற்காக புத்தகம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், புத்தகம் போடுவதற்காக எழுதுவது என்பதை புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில் எழுதுபவர்களால்தான் புத்தகம்  வெளியிட முடியுமாக இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவைகள், பொருளாதார சுமைகள் என்பவற்றை வைத்துப் பார்த்தால் ஒருசிலருக்கு எழுத்து தானே தொழிலாக இருக்கிறது. அவ்வாறானவர்களின் இந்த முயற்சி பிழையாக எனக்குப் படவில்லை.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சி எழுத்து துறையின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமையும் அதேவேளை, அதுவே அதனது வீழ்ச்சிக்கும் வழிசெய்வதாக அமைகின்றது இதை பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி என்று நோக்கினால் ஆக்கங்களை தட்டச்சு செய்துகொள்வது முதல் அதனை பதிப்புக்கு கொடுப்பது வரை பெரும்பாலும் எழுத்தாளர்களே தங்களது வேலைகளை செய்து முடிக்கிறார்கள். நேரச்செலவு, காசுச் செலவு மிச்சமாகிறது. இது தவிர இன்னொரு பக்கம் இணையம், பேஸ்புக் என்று தொழில்நுட்பம் அசுர வேகத்தில் முன்னேறியிருக்கிறது.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் முன்னேறினாலும் அதை பயன்படுத்தி நல்ல விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாத சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மற்றவர்களில் தனிப்பட்ட விடயங்களில் தமது நேரகாலத்தை வீணாக்கி, மனித நேயத்தை மறந்து ஏணையவர்களுக்கு மனக்கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றமை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. விதைப்பதைத் தான் அறுவடை செய்ய முடியும். அதனால் நல்லதை விதைத்தால் நல்லதைப் பெறலாம். தீயதை விதைத்தால் தீயதைப் பெறலாம். ஆகவே நேர்மையாக நடந்துகொள்வது அணைவருக்கும் நன்மை பயக்கும்.


கேள்வி:-இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?

பதில்:- நானும் சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களும் இணைந்து பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையை நடாத்தி வருகின்றோம். இதுவரை 10 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழிலும் பெண் எழுத்தாளர்களை கௌரவிக்குமுகமாக அவர்களது புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து நேர்காணல் செய்து வருகிறோம். அதேபோல புதிய எழுத்தாளர்களுக்கு களம் கொடுத்து அவர்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறோம்.

நேர்காணல்- க.கோகிலவாணி
http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/52499-2012-11-11-10-31-26.html