என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

நீ இன்று வரமாட்டாய்

நீ இன்று வரமாட்டாய் என்று
நானெப்படி அறிவேன்?
நீ இல்லாவிட்டால்
நான் தீயாய் எரிவேன்!

உண்மையில்
நீ வர மாட்டாயா?
சேலை அணிந்த
ஒரு தேவதையாக
என் முன்னே தோன்ற மாட்டாயா?

எதிர்பாராத தருணமொன்றில்
குட்மோர்னிங்
என்று அழகாக சொல்லிக்கொண்டு
என்னிடம் வந்துவிட மாட்டாயா?

இல்லை!
நீ வரமாட்டாய்..

எனக்குத் தெரியும்!
காத்திருக்க வைப்பதிலும்,
பொய் சொல்லிச் சிணுங்குவதிலும்தான்
பாசத்தின் ஆழம் கூடும் என்று!

உன் குரல் கேட்ட பின்பு
குமுறிக் கொண்டிருந்த என் இதயம்
குளிர்ச்சியானது..
'எனக்காக செலவழிக்க
வேண்டாம் பாசம் மட்டும் போதும்'
என்பவளே
பாசத்தை தின்றும்
நேசத்தைக் குடித்தும்
உயிர் வாழலாம் என்கிறாயா?

அப்படியானால் வா
இந்த பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
ஒரு புள்ளியாய் மாறி
மணல் சோறு தின்னலாம்
மழையைக் குடிக்கலாம்
ஆகாயத்தை வாரியெடுத்து
அணிந்து கொள்ளலாம்
கடல் நீரா(ரி)ல்
கவிதை எழுதலாம்...

முழு உலகையும்;
கற்பனையில்
உலா வரலாம்...
என் மனசைத் திறந்து பார்
உனக்காக ஓராயிரம்
விண்மீன்களை சேமித்திருக்கிறேன்..

திறக்க முடியவில்லை என்றால்
உடைத்துப் பார்
நீ கோபத்தில் வீசிய சொற்களை எல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் மீதுள்ள பாசம்;
நிரம்பி வழியும்
என் இதயத்துக்கு - என்ன அணைக்கட்டு
போடப் போகிறாய்?

தயவுசெய்து
திங்கட் கிழமையாவது வாடி..
அது வரை என் மனசு கிடக்கும் 'வாடி'..!