என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, October 29, 2014

நானும் எனது கவிதைகளும்

என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!

புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!

மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!

தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!

புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!

Monday, October 27, 2014

எல்லாமாக நீ!

ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!

காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!

சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!

ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!

நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!

கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!

மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!

என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!