என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, February 28, 2012

தேடல்

அன்பனே
எங்கிருக்கிறாய்
எப்படியிருக்கிறாய்?
முதலில் இருக்கிறாயா
நீ உயிருடன்?

காதல் சொன்னவனே
உன் காரிகையிவளை
மறந்துவிட்டாயா?
பதில் நான் சொல்லாததால்
உன் காதலைத்
துறந்துவிட்டாயா?

என்னைப் பார்த்தால்
நானென்று
அடையாளம் காணுவாயா?
எதிர்த்துச் சென்றவள் என
மௌனத்தைப்
பேணுவாயா?

என்னைக் கண்டால்
இதயம் பூத்து
ஓடி வருவாயா?
இதயத்தை
ஒடித்தவள்தானே என
உன் உள்ளம்
வாடி விடுவாயா?

உன்னுடன் பேசினால்
மகிழ்ச்சியாய் கேட்டிருப்பாயா?
இல்லை
என்னைத் தெரியாதென
வெறுப்பினால் கூறிடுவாயா?

மீண்டும் ஒருமுறை
உன்னைக் காண வேண்டும்..

ஆனாலும் ஓடிவந்து
உன் கை பிடிக்க முடியாது..
கதறியழ முடியாது..
என்னை ஏற்றுக்கொள் என
காலில் விழ முடியாது..
உனக்காக
காத்திருக்கவும் முடியாது!

அந்தகார இரவுகள்
அவஸ்தையில் கழிந்ததுபோல்..
அந்தரங்க வேதனை
அகம் முழுதும் எரித்ததுபோல்..

ஒரு பார்வை
ஒரு சிரிப்பு
மௌனம்
கண்களால் கையசைப்பு!

அத்தோடு முடியும்
நாம்
சந்தித்த பொழுதுகளும்
சிந்தித்த காதலும்...!!!