என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, May 21, 2011

போலி மனிதர்கள் !

கூடுகட்டிக் குருவி வாழும்
கூட்டை உடைப்பவன் இருக்கிறான்..
பாடுபட்டு வாழ்க்கையோட்டும்
மனிதனை வெறுப்பவன் இருக்கிறான்!

போட்டி போட்டு பொறாமையிலே
வெந்து அழிபவன் இருக்கிறான்..
காட்டிக்கொடுத்து மகிழ்ச்சியடையும்
மானிடனும் இருக்கிறான்!

தவறுசெய்யா பெண்ணைப்பற்றி
தவறு சொல்பவன் இருக்கிறான்..
கயிறுகொடுத்து தூக்குபோட
சொல்லிக் கொடுப்பவன் இருக்கிறான்!

பணத்துக்காக பிற மனிதரின்
தலையெடுப்பவன் இருக்கிறான்..
குணத்தை என்றும் மதிக்காமல்
குறை கூறுபவன் இருக்கிறான்!

தோற்றம் பார்த்து யாவரையும்
எடை போடுபவன் இருக்கிறான்..
கைதூக்கி விட்டவனின்
கால் வாருபவன் இருக்கிறான்!

உறுதியாக வாக்களித்து
கழுத்தறுப்பவன் இருக்கிறான்..
இறுதிவரை பொறாமையிலே
பொருமுபவன் இருக்கிறான்!

பிறருடைய மனசை என்றும்
புண்படுத்துபவன் இருக்கிறான்..
வார்த்தைகளால் கத்திசெய்து
துன்புறுத்துபவன் இருக்கிறான்!

வஞ்சம்கொண்டு நஞ்சுடனே
பழகுபவன் இருக்கிறான்..
மனசாட்சி இறந்து போய்
வாழ்பவனும் இருக்கிறான்!!!