என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, February 13, 2011

சிப்பிக்குள் முத்தாகி!



என் கண்ணே உன்னிடமே
இவன் வேண்டுகோள்..
காலமெல்லாம் நீயே தான்
என் ஊன்றுகோல்!
உயிரோடு நானிருக்க
உணர்வோடு வாழ்ந்திருக்க
நீயன்றோ எனக்கான
என் தூண்டுகோல்!

கல்லூரியில் ஒரு நாளில்
எனை வாழ்த்தினாய் - பதில்
சொன்ன போது நீ தலை தாழ்த்தினாய்!
எனைப்பார்த்து கண்காட்டி
என்மனசை தடுமாற்றி
உன் பார்வையில் என்னை
உடன் வீழ்த்தினாய்!

உயிருக்குள் விளையாடி
எனை மோதினாய் - கனவுகளில்
வந்தெந்தன் தலை கோதினாய்!
கவியெழுதி நாள் செல்ல
உன் எண்ணம் நான் கொள்ள
காதலின் கீதங்கள் தினம் ஓதினாய்!

விபரங்கள் தெரிந்திட்ட
நாள் முதலாய் நாம்..
எனக்கு நீ உனக்கு நான்
என்றிருந்தோமே
சுகமின்றி நானிருந்த
ஓரு நாளில் நீ
எனக்காக கோயிலுக்கு சென்றிருந்தாயே!

மாந்தோப்பில் மா பறிக்கும்
நேரத்தில் நான்...
விழுவேனோ என்று நீ
பயந்திருந்தாய் ஏன்?
விழுந்தெந்தன் கைகால்கள்
புண்ணானதும்
உன் கண்ணில் நீர் ஆறாய்
ஓடியதும் ஏன்?

கடற்கரையில் சிப்பிதேட
சென்றிருந்தோமே - சிப்பிக்குள்
முத்தாகி நின்றிருந்தோமே!
காதலுடன் இவ்வாழ்க்கை
என்றென்றும் எப்பொழுதும்
வாழ்நாளில் நிதம் வேண்டும்
என்றிருந்தோமே!

வாழ்வு பற்றிய விடயங்களை
சித்தரித்தோமே - கவலை தரும்
அனைத்தையும் கத்தரித்தோமே..
நாம் வாழ நலமாக
வாழ்நாளில் சுகமாக
புரிந்துணர்வு வேண்டுமென
உச்சரித்தோமே!


பொறாமையான கண்களுக்கு
கொள்ளி வைத்தோமே..
நமை தவிர யாவரையும்
தள்ளி வைத்தோமே!
நம் அன்பில் எப்போதும்
துயர்வந்த போதினிலும்
நமக்குள்ளே காதலையே
அள்ளி வைத்தோமே!

உனக்காக என் ஆயுள்
நீண்டிருக்குமே - என்று
நான் சொல்லி இரு ஆண்டிருக்குமே!
அந்நாளின் இன்பங்கள்
உனைப்பிரிந்த துன்பங்கள்
இப்போதும் என் நெஞ்சில்
வாழ்ந்திருக்குமே!

எப்படியோ நம் காதல்
வீட்டில் தெரிய - வீட்டாரின்
பேச்சினிலே தீயாய் எரிய!
காரணம் தான் என்னவென்று
கடைசியிலே சொன்ன போது
சீதனம் தான் அதுவென்று
கிடைத்தது அறிய!

உன் தகப்பன் எனக்கும் தான்
தந்தையன்றோ? அன்றென்னில்
உதித்த எண்ணம் விந்தையன்றோ?
பல நாழிகை சிந்தித்தும்
பலபேரை சந்தித்தும்
குழம்பிப் போனது என் சிந்தையன்றோ?

வெளிநாடு போவதாய் நான்
சொல்லி முடிக்க - அக்கணமே
கவலையால் உன் உதடு துடிக்க!
சரிஎன்றும் சொல்லாமல்
துணிவும் தான் இல்லாமல்
புறப்பட்டேன் அன்று நான்
உள்ளம் வெடிக்க!

உடல் இளைக்க மாடாய் நான்
அங்கு உழைக்க - அவை மீறி
உன் நினைப்பு நெஞ்சைத்துளைக்க!
நான் என்னை திடப்படுத்தி
எனில்உன்னை நிலைநிறுத்தி
பொறுத்தேனே கண்ணே
நம் காதல் நிலைக்க!

ஆண்டிரண்டு கழிந்து
உனைத்தேடி வந்தேனே - ஓடி வந்து
நீ அணைப்பாய் என்றிருந்தேனே!
எனைப்பார்த்து நீயும் தான்
வேர்க்கின்றாய் ஏன்?
கதவிடுக்கில் ஒளிந்திருந்து
பார்க்கின்றாய் ஏன்?

உன் உயிரில் நான் பாதி
என்று இணைத்துக்கொள்..
வா பெண்ணே வந்தென்னை
உடன் அணைத்துக்கொள்!!!