என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, December 3, 2013

உறவில்லா மலரே

உயிருக்குள் பூத்த
உறவில்லா மலரே
உன்னிடம் எதைப்பார்த்து
உருக்குலைந்து போயிருக்கிறேன்?

நீயில்லா நிமிடங்களின் வலியை
நிஜமாகவே உணரச் செய்தவனே
உனக்குத் தெரியுமா?
இப்போதெல்லாம் - என்
சிந்தையில் நிறைந்த
சிறைக்கைதி நீதான் என்று?

உன் ஞாபகங்கள் சுமந்தபடி
எப்படியோ கழிகின்றன
எனதான நிமிடங்கள்!

வருவாயா இல்லையா
வரவேண்டுமே... என்று
எனதுள்ளம் ஒவ்வொரு நொடியும்
கிட்டத்தட்ட ஆயிரம் தடவை
துடிக்கிறது தெரியுமா?

சாப்பிடும் போதும்
தூங்கும் போதும்
இருக்கும்போதும் நடக்கும்போதும்
வீட்டிலும், அலுவலகத்திலும்
நீ தான் இருக்கிறாய்
என் இதயத்துக்குள்!

ஆனபோதும்
நீ என்னை, என் மனதை
களவாடியதை நான்
எப்படி எடுத்துரைப்பேன்?

எதுவுமே இல்லாமல்
ஏற்பட்ட நம் உறவு
எதுவுமே இல்லாமல்தானே
எட்டி நடக்கிறது?

அப்படியிருக்க
என் நினைவுகள் கொஞ்சமாவது
உனக்குள்ளும் இருக்கிறதா?