என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

உன்னைப் பற்றியே இரகசியம் பேசுகிறேன்!

நீ வரமாட்டாய் என்று
நான் உறுதி கூறினாலும்
என் மனது அடம்பிடித்து
என்னை வதைக்கிறது!

விடிந்தும் விடியாத
இந்த காலைப்பொழுதில்
கீச்சிட்டுக் கொண்டிருக்கும்
ஊர்க் குருவியிடம்
உன்னைப் பற்றியே
இரகசியம் பேசுகிறேன்!

இதயத்தில் சுழன்றடிக்கும்
சூறாவளிக்கு
நீ தந்த கவிதைகளைத்தான்
கவசமாக காட்டிக் கொண்டிருக்கிறேன்!

என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் போல் பூத்திருக்கும்
வாசமில்லாத மலர்களுக்கும்
இப்போதெல்லாம்
வணக்கம் கூறி புன்னகைக்கிறேன்!

மார்கழிக் குளிரால்
வெடவெடக்கும் என் மேனிக்கும்
உன்னால் சிறகடித்து
படபடக்கும் என் இதயத்துக்கும்
உன் நினைவுகளை அள்ளியெடுத்து
போர்த்திக் கொண்டிருக்கிறேன்!