என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, October 29, 2014

நானும் எனது கவிதைகளும்

என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!

புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!

மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!

தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!

புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!

Monday, October 27, 2014

எல்லாமாக நீ!

ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!

காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!

சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!

ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!

நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!

கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!

மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!

என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!

Tuesday, August 5, 2014

மரண வலி

உடைத்து வெளிவந்த
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..

முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....

தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!

புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!

வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!

மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!

என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!

பனித்துளியா நீ?

என் ஞாபகப் புற்களில்
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?

இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?

இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?

உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?

மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?

என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?

எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?

மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?

எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?

எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?

Thursday, July 17, 2014

நீ ஒரு குழந்தையாக

நெடிதுயர்ந்த
ஒரு ஆலமரம் போன்ற
உன் காதலில்
கூடு கட்டி வாழ்ந்திருக்க
விருப்பம் எனக்குள்!

அருகருகே
இருந்துகொண்டே
நம் வாழ்நாளை
கடத்திவிட
பிரார்த்தனை எமக்குள்!

காதலை மட்டுமே கொண்டு
மற்றதெல்லாம் தவிர்ந்து
ஒரு எல்லையில்லாப் பெருவெளியில்
பயணிக்கிறதெம் உறவு!

தினம்தினம் குறுஞ்செய்திகள்
நள்ளிரவு ரகசியக் குரல்கள்
கடிதங்கள்.. வாழ்த்தட்டைகள்
எதுவுமேயில்லாமல்
யதார்த்தபூர்வமாய்
நகர்கிறது நம் நேசம்!

பக்கத்தில் நீ வந்திருந்தபோதுதான்
என் பெண்மையின் நாணமும்
உன் ஆண்மையின் வீரமும்
சிநேகபூர்வமாகின!

வாழ்வதற்காக காதலே தவிர
காதலுக்காக வாழ்க்கை அல்ல
என்ற நம் சித்தாந்தத்திலிருந்து
என்றுமே நாம் விலக நினைத்ததில்லை!

நீயில்லாத நிமிடங்களில்
உன்னை
என் காதலனாய்
கணவனாய் எண்ணி
கனவுகள் வளர்க்கும் நான்..

கண் பார்வைக்குள் அடங்கி
என்னருகில் நீ இருக்கையில்
உன்னை ஒரு குழந்தையாக
பார்த்து மகிழ்கிறேன்!

காதலுக்குள் தாய்மையும் இருக்கிறது
என்பதைப் புரிய வைத்தவனே..
நீண்ட நாள் பிரிவைத் தாங்க முடியாது..

ஒரு வனாந்தரத்து இருட்டை
எனக்குள் தந்துவிடாமல்
பூக்களால் நிறைந்த
என் இதயத்தை
உனக்குள் வசமாக்கிட வா!!!

Monday, June 23, 2014

வலி..

தாங்க முடியாத சுமையொன்றை
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..

நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு

ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!

அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..

செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?

வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..

எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?

எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?

மெலிதான நேசம்

உள்ளத்தில் தோன்றும்
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?

தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?

மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!

பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!

ஆதலால்

அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!

எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!