எச்.எப். ரிஸ்னா கவிதைகள்
என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி
Wednesday, November 23, 2016
எனக்கு உங்களைப் பிடிக்காது
வகுப்பில் எத்தனையாம் பிள்ளை என்று கேட்டு
என்னைக் குடைந்தெடுத்து வருத்தியதால்
விடை சொல்லாததுகண்டு என் பெற்றோர் என்னை அடித்ததால்
எனக்கு உங்களைப் பிடிக்காது
விசேச வைபவங்களின் போதெல்லாம் அம்மா காணாதபடி
நீ எதற்காக இங்கு வந்தாயென்று காதுக்குள் கேட்பதால்
தலைகுனிந்தபடி நான் அங்கிருந்து அகலுவதால்
எனக்கு உங்களைப் பிடிக்காது
தம்பி பிறந்த நாளொன்றில் வந்து என்னை பார்த்து
இவனைவிட சின்னவன் அழகென சொல்லியதால்
அதனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்ததால்
எனக்கு உங்களைப் பிடிக்காது
சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்கள் இல்லம் தங்கியநாளில்
நானிருக்க உங்கள் பிள்ளைக்கு மாத்திரம் பரிமாறியதால்
எனக்கு எச்சிலூற அதைக்கண்டு என்னை விரட்டியதால்
எனக்கு உங்களைப் பிடிக்காது
புத்தாடை அணிந்துநான் பவனி வந்த பொழுதெல்லாம்
சீ நல்லாவேயில்லை என அப்பாவுக்கு கேட்காமல் கூறியதால்
நான் தவிப்பது கண்டு உங்கள் முகம் மலர்ந்ததால்
எனக்கு உங்களைப் பிடிக்காது
இதையெல்லாம் என் மனதில் வைராக்கியமாய் சுமந்து
படிப்பில்; கவனம் செலுத்தி நான் முன்னேறிவிட்டதால்
இந்த ஊர் போற்றும் மனிதனாக நானும் மாறிவிட்டதால்
உங்களுக்கு என்னைப் பிடிக்காது!!!
Older Post
Home