என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, January 19, 2014

வாழ்க்கை எனும் நாடக மேடை!


தோற்றத்தில் நைந்துள்ளோமா
ஏற்றத்தில் தொய்ந்துள்ளோமா
மாற்றங்கள் நடக்கும் என்றே
நாற்றத்தில் வாழ்கிறோமா?

கறுத்த உடலோடும், வெயிலோடும்
பெருத்த மழையோடும், பனியோடும்
சிறுத்த லாபத்துக்காகN;வண்டி
பொறுத்துப் பொறுத்து இருக்கிறோமா?

கரிய புகை படிந்த காம்பறாவில்
சிறிய, பெரிய பிள்ளைகளுடன்
அரியதொரு வாழ்வைத்தான்
தெரியாமலே கடத்திவிட்டோம்!

அன்னை போல் மதித்தேதான்
மண்ணை நாம் மிதித்தோமே
பெண்ணையும், ஆணையும்
கண்ணைப் போல் காத்தோமே!

மலை வாழ்க்கை பழகிடுச்சு
இலைசாயம் இனிச்சிடுச்சி
தலை தோறும் வறுமை எனும்
அலை வந்து அடிச்சிடுச்சு!

சாதுவாக வாழ்கின்றோம்
மாதுகளை மதிக்கின்றோம்
தீது என நன்குணர்ந்து
சூது கூட தவிர்த்திருந்தோம்!

சுமை வந்து நெரித்த போதும்
எமைப் பற்றி கவலையில்லை
இமை போல துரை காப்பார்
நமை என்று நம்பி நின்றோம்!

துடுப்பு இல்லா ஓடம் போல
இடுப்பு கடுத்தே வேலை செய்து
அடுப்பு மூட்டிகொஞ்சம் சமைத்து
விடுப்பு பார்க்கும் வாழ்க்கை நமதே!

படித்த இளைஞர் வாழ்க்கையாவும்
குடித்துக் குடித்தே வீணாய் போகும்
வடித்த கண்ணீர் ஆவியாகும்
நடித்த வாழ்க்கை மேடை ஏறும்!

நாளை எப்படி கழியும் என்று
வேளை தோறும் சிந்தித்தேதான்
காலை மாலை ஓலைக் குடிலில்
ஏழை வாழ்க்கை முடிஞ்சு போகும்!!!

Thursday, January 16, 2014

அன்புத் தோழிக்கு

நீ என்மீது
அளவு கடந்த அன்பை காட்டியபோது
என்னால் அதனைப் புரிந்து கொள்ள
இயலவில்லை

அடிக்கடி வருகின்ற
உன் மெஸேஜ்களும்
மிஸ்கோல்களும்
நான் உன்னிடம் பேசாதபோது
நீ கொண்ட கோபமும்
உண்மையில் என்னை
எரிச்சல் அடையவே செய்தன

எனது அன்பை வழிபார்த்து
நீ காட்டிய பாசத்தின் தடயங்கள்
அப்போதெல்லாம்
என் இதயத்தில் பதியவேயில்லை

உன்னை சந்தித்த தருணத்தில்
உன்னிடம் ஏற்பட்ட
அந்த அன்பு கூட
காலப்போக்கில்
காணாமலேயே போனது

கண்ணில் காணாத பொருள்
கருத்திலிருந்து மறையும்
என்ற கூற்றுக்கிணங்க
உன்னை நான்
மறந்தே போனேன் தெரியுமா?

ஆனால்

இன்று
நானும் உன்னைப் போல
ஒரு அன்புக்காக ஏங்குகின்றேன்
உன்னைப் போலவே
மெஸேஜ் பண்ணுகிறேன்
அடிக்கடி மிஸ்கோல் கொடுக்கிறேன்..

நான் எப்படி உன்னை
தவிர்த்துவிட்டேனோ
அதைப் போலவே
இல்லையில்லை
அதையும்விட இப்போது
தவிர்க்கப்படுகிறேன்

என்னில் பாசம் காட்டாத இடத்தில்
நான் வைத்த அன்பு
கண்டுகொள்ளப்படாமல்
அந்தரத்தில் இருக்கிறது

அதனால்தான்
நீ கொண்ட அன்பின் ஆழத்தையும்
பிரிவின் நீளத்தையும்
காலம் இப்போது
நன்றாகவே புரிய வைத்திருக்கிறது!!!

Wednesday, December 25, 2013

நீ என்ன செய்வாய் பாவம்!

நீயும் நானும்
அமர்ந்திருந்து பேசும்
அந்த படிக்கட்டு
இன்று ஏனோ வெறுமையாக!

உன் முகம் பார்த்தபடியே
நானிருக்கும் பொழுதுகள்
நீயில்லாத இன்று கசப்பாக!

பலர் சுற்றியிருந்த போதும்
நான் மட்டும்
இந்த குரூர உலகில்
தனித்து விடப்பட்டதாய்
உணர முடிந்தது என்னால்..
இந்த மாற்றங்கள் எல்லாம்
ஏற்பட்டதெனக்கு உன்னால்!

உன் அருகேயிருந்து
பேசும் அழகிய தருணங்கள்..
இன்று ஆயிரம் முறை
தோன்றி மறைந்தது
தெரியுமா உனக்கு?

காலை, பகல், மாலை
எல்லாம் உன்னோடு
 செல்ல காத்திருப்பேனே
அந்த சுகம்
இன்று சுமையாகிப் போனதில்
ஆச்சரியம் இல்லை

உனக்கு இப்படியெல்லாம்
இருந்திருக்காது..
ஏனெனில்
இந்த அவஸ்தையை
ஆரம்பித்து வைத்த
பாவி நான் தானே.
நீ என்ன செய்வாய்
பாவம்!

என்னவென்று தெரியவில்லை

என்னவென்று தெரியவில்லை
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது

தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது

நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது

எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது

வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது

மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது

இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!

கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது

யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது

உனக்கொன்று தெரியுமா?

என் இதய மாளிகையில்
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!

உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..

இல்லை
நான் தான்
உன்னுள்  தொலைந்துவிட்டேன்!

கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!

இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே

வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது

சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது

அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்

வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்

எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!

சாயம்போன இதயம்

மறந்து போனேன் எல்லாமே..
என் இயல்பை
என் இருப்பை..

உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!

எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..

உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..

என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!

என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?

உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!

நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!

அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது

எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?

அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்

பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!

சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..

கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..

வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்

ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!

சந்தர்ப்பங்கள்

எத்தனை இன்பம்
உன்னுடன் நான் பேசிவிட்டால்..

மனசெல்லாம் பூ பூக்கிறது..
தென்றல் தாலாட்டுகிறது..
பாரமாக இருந்த இதயம்
பஞ்சாக பறக்கிறது!

நிறைய பேச வேண்டும்
உன் கண்கள் பார்த்து
உன் விரலைப் பிடித்து
உனதருகே இருந்து
தனிமையில் நிறைய பேச வேண்டும்

நான் இழந்தவை பற்றி
என் எதிர்காலம் பற்றி
என் ஆசைகள் பற்றி
என் கனவுகள் பற்றி
என் அன்பு பற்றி
என்னைப் பற்றியெல்லாம்
நிறைய பேச வேண்டும்

சந்தர்ப்பம் வருமா.. அவை
எப்போதும் போல
எனக்கு சதி செய்யுமா?

அல்லது
தருணம் பார்த்து யாராவது வந்து
என் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்களா?

உன்னுடன் பேசுவதற்கான
சந்தர்ப்பங்கள் தானாய்
உருவாகாது..
நாம் தான்
உருவாக்க வேண்டும்...

நான் உருவாக்கிக் கொள்வேன்
நீ???