என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன!

நான் மூளையை கழற்றிப் பார்க்கின்றேன்..
அதன் அறைகளுக்குள்ளே..
குட்டிச் சாத்தான்கள் ஓடிப் பிடித்தும்
ஒளிந்து திரிந்தும் விளையாடிய வண்ணமாக!

என் நுரையீரலை நோக்கிக் குனிகிறேன்
கசப்பான அனுபவங்ஙளால்
குப்பை படிந்த நிலையிலே அது!

குடல்களை மாலை செய்து போட்டு
ரசிக்க முற்படுகையில்
எனை ஏமாற்றியவர்களின்
வார்த்தை விஷம் அதில் வழிந்த படியே!

செவிகளிரண்டை ஆராய்கிறேன்..
செய்திடாத தவறுகளுக்காய்
தந்த சன்மானங்கள் சதாவும் எதிரொலித்து
வதைத்துக்கொண்டே தான்!

எனை சூழவுள்ளவர்களின்
சுவாசக்காற்றினை ஊள்ளீர்க்கிறேன்!
நரமாமிச வாடை
எனை நடுநடுங்கச் செய்கிறது!

என் கண்கள் எனைப் பார்த்து
ரகசியம் சொல்கிறது..
மனிதனின் மனம் சமாதியாகி
வெகு காலம் என்று!

அப்போது என் இதயம் மட்டும்
பரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது
ஓ..
அதற்குத்தான் என்னால்
எத்தனை ஏமாற்றங்கள்!!!