என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

உணர்வுப் பிரிக்கை !

சூரியன் அஸ்தமனமாகும் வேளைதனில்
என் ரணமாகிய நினைவுகள் விழித்துக்கொள்ள..
நிலவு மறையும் காலைகளில்
போலி ஒளிக்கீற்றுகள்
பரப்பிவிடப்பட்ட நிலையில் நான்!

வானுள் புதைந்து போன நட்சத்திரங்களாய்
ஆயிரமாயிரம் வாட்டங்கள்
வெளிப்பட முடியாமல் தவிக்கிறது!

உலகத்தின் பார்வையில்..
வாதித்தால் நான் வாயாடி
அடங்கி நின்றால் திமிர்காரி
கோபப்பட்டால் அடங்காப்பிடாரி
சமாளித்துப்போனால் ஏமாளி!

இப்பட்டங்கள் அப்பட்டமாகவே
சொல்லப்படுகையில் கொதிக்கும்
எண்ணெய்யில் இதயம் விழுந்தாட் போல!

என்னுள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை
எல்லோரும் அறிவதில்
ஏனோ எனக்கு உடன்பாடில்லை!

என்னில் உற்பத்தியாகும் சில வினாக்களுக்கான
விடைகள் இன்னும் ஓர் பூர்வீகத்தின்
சுவடுகளுக்குள் ஒழிந்த படியே!

அதனால் தானா எல்லோரும்
சந்தோஷ வாசலில் வாழ..
என் உயிர் மட்டும் ஊசலில் வாடுகிறது???