என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 10, 2012

காலாவதியாகாத நினைவுகள்


காலவோட்டத்தின்
காய் நகர்த்தலில்
நீயும் நானும் பிரிந்தாலும்
உன் எண்ணம்
என் ஞாபக ஊஞ்சலில் ஆடும்!

கற்பனைகள் வளர்த்து
கவிதைகள் வரைந்து
கவலைகள் மறந்து
நாமிருவரும்
சுதந்திரமாய் திரிந்த காலங்கள்
மனசுக்குள்
காலாவதியாகாமலேயே!

தோள் கொடுப்பான் தோழன்
என்பதற்கிணங்க
என் அத்தனை
உணர்வுகளையும்
உள்ளக் கிடக்கையாக்கி
கண்கள் உனக்காக
கண்ணீர் சொரிகின்றன!

அந்தி மழையில்
ஆனந்தித்த சுகம்..
வெட்ட வெயிலில்
குளிர் நீருக்கலைந்த தவிப்பு..
நுளம்புத் தொல்லையால்
தொலைத்திருந்த
நமதான தூக்கங்கள்..

உப்பு அதிகரித்த
உணவுக்குள் உடனே
நீர்விட்டு அருந்திய பாசம்...

எல்லாமே
என் ஆழ் மனதில்
சதா காலமும்
சஞ்சரித்தபடியே இருக்கும்!

உனக்கான
வாழ்தலின் இருப்பை
உன் தோழன் என்ற முறையில்
உடனே பார்த்துவிட துடிக்கிறேன்!

ஆனால்

அதற்குள்
என் மரணம்
நிகழாதிருக்க வேண்டும்!!!