என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 19, 2012

எதுவுமில்லை


எல்லோரும் உன்னை எதற்காய்
பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்?

காசுடன் நீ
கட்டிப்பிடித்து விளையானாய்..
ஏழைகளின் கஷ்டம் புரியாமல்
அவர்களை துன்புறுத்தினாய்!

நீயே மேதை
நீயே அறிவாளி என
உனக்குள் நீயே எண்ணி
ஏனையோரை ஏளனப்படுத்தினாய்!

மற்றவர்களின் பசியை அறிந்திருந்தும்
அவர்களின் முன்
அறுசுவை உணவு பரிமாறி
ஆடம்பரமாய் உண்டாய்!

ஒரு மிடறு தண்ணீருக்கு
கணக்குப் பார்த்த நீ
உனக்காக மட்டும்
குளிர்பானம் வாங்கியருந்தினாய்!

பிள்ளையின் நோயினால்
பிறர் தவித்திருக்க – நீ
உன் பிள்ளைக்கு
விளையாட்டுப் பொருட்களை
வாங்கியடுக்கினாய்!

கால் கடுக்க பலர்
காத்திருப்பது கண்டும்
காரெடுத்து - நீ
திமிராய்ப் போனாய்!

எதிர்வீட்டார்
கவலைகளில் மூழ்கியிருக்க
உன் வீட்டை
இசை வெள்ளத்தால்
மூழ்கடித்தாய்!

புரிந்துகொள்
நேற்றுவரை மனிதனாக
இருந்த நீ
இன்று சடலமாக
மாறிவிட்டாய்!

நீ சேர்த்த
செல்வங்கள்..
புகழ்கள்..
பட்டங்கள்..
எதுவுமில்லை!

அதேபோல்
உனக்காக
உன் பிரிவுக்காக
கண்ணீர்விட..
பிரார்த்திக்க..
கவலைப்படக்கூட
இன்று யாருமேயில்லை!!!