என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 21, 2012

இருளுக்கு தீ வைப்போம்


வெட்ட வெளியினிலும்
அட்டைக் கடியினிலும்
அடிமை வாழ்வு..

மாடாய் உழைத்தும்
ஓடாய்த் தேய்ந்தும்
ஓயவில்லை ஏற்றத்தாழ்வு!

பட்டப்படிப்பு படித்திடனும்
பட்டதாரி ஆகிடனும்
பட்டணம் சென்று ஒரு
வைத்தியனாய் மாறிடனும் என்ற
கனவெல்லாம் நனவாகாமலேயே!

வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
பட்ட பாடெல்லாம்
காகித ஓடமாக இப்போதும்!

உழைத்தும் பலனின்றி
பிழைக்க வழியின்றி
இருட்டோடு வாழுகிறோம்
வெளிச்சத்தைத் தேடுகிறோம்!

கொழுந்து கிள்ளிய நகங்கள்
வெடித்து இரத்தம் கசியும்
வெயிலோடும் களைப்போடும்
வந்திடும் பசியும்!

எம்மவரின் உதிரமும்
நிலத்தில் விழும் வியர்வையும்
ஒன்றோடு கலந்தேதான்
தேயிலையும் உருவாகும்!

உருவான தேயிலையால்
உருவாக்கிய தேநீரில்
எம்மவரின் உழைப்பெல்லாம்
சிவப்பாகி சாயம் வரும்!

கொடிய மண்சரிவும்
கொடூர மழையும்
லயத்துக் காம்பராக்களை
லாவகமாய் உடைக்கும்!

ஒரு நாள் சம்பளமும்
ஒழுங்காய்த் தரப்படாமல்
ஒழுங்கற்ற நிர்வாகம்
எம் வாயை அடைக்கும்!

ஷஎழில் கொஞ்சும் மலையகம்|
ஏட்டில் தான் காணுகிறோம்
மலை நாட்டு மக்களுக்கு
மதிப்பில்லை என நாணுகிறோம்!

இனிமேலும் பொறுக்காமல்
நாணயத்தை இழக்காமல்
இருளுக்குத் தீ வைப்போம்
இதிகாசம் மாற்றிடுவோம்!!!