என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 9, 2016

வாசல் வந்த நதி

நதியே
நீ என் வாசல் தேடி வந்திருந்த போது
நான் புறப்பட்டுப் போயிருந்தேன்
திரும்பி வந்துப் பார்க்கையில்
நீ வந்து போன தடங்கள் மாத்திரமே
மிஞ்சிக் கிடந்தன..

வண்டுகளுடன் போராடும்
பூக்களின் வேதனை
யாருக்கும் தெரிவதில்லையாதலால்
பூக்களுக்கு ஆறுதல் சொல்லப்
போயிருந்தேன்..
அப்போது பார்த்து
நீ வந்துச் சென்றிருந்தாய்

எனது அருகாமையில் வசித்துவிட
நீ எண்ணியிருந்ததாய்
அன்றிரவு நிலவெனக்குச் சொன்னது!
நட்சத்திரங்கள்
அழுது வடித்தன..
அடுத்தநாள் சூரியன் கூட
கோபப்பட்டு சுட்டெரித்தது!

நதியே
என்னிடம் உன் காதலை
இல்லை இல்லை
உன்னிடம் என் காதலைச்
சொல்லுமுன்பே நீ
வற்றி விட்டாயா?
உனக்குத் தெரியுமா
நான் உன்னை
எவ்வளவு காதலித்தேன் என்று?

நீ உன் பாட்டுக்கு
(ஓ)பாடிக் கொண்டிருந்த போதெல்லாம்
அதை இசையாய்
வீணை மீட்டியிருக்கின்றேன்...
தென்றலெனும் என் தோழிகளுக்கு
உன்னைக் காட்டிக் காட்டி
சந்தோசப்பட்டிருக்கின்றேன்..

எதிர்பாராத சமயம்
உன் மேனி தொட்டு நான் போகும்போது
நாணப்பட்டு முகம் சிவந்திருக்கிறேன்..
உன் தோளில் சாய்ந்துகொள்ள வரும்
அழகிய மீன் குஞ்சுகளுக்கெல்லாம்
பொய் சொல்லி அனுப்பிவிட்டு
உன்னை மட்டும் ரசித்திருக்கிறேன்..
என்னைப் பார்த்து கண் சிமிட்டும்
மின்மினிப் பூச்சிகளை எல்லாம்
கண்டித்து அனுப்பியிருக்கிறேன்..

மன்னிக்க மாட்டாயா?
இலைகள் கொண்டு
தூதுவிடுகின்றேன்
என்னை ஏற்றுக்கொள்..
என் அன்பில்; நனைந்து
நீ சிலிர்த்துக்கொள்..

வா
வந்தென் காதல் ஏற்றுக்கொள்..
இப்படிக்கு
உன் காற்று!!!